Thursday, June 7, 2018

நீரின் ஞாபக உணர்வு - Masaru Emoto


உங்களுக்கு அறிமுகமில்லாத எவர் வீட்டுக்குப் போனாலும் கூட உங்களை வரவேற்று அமரச் செய்தவுடன் உங்களுக்கு அந்த வீட்டில் சேமித்து வைத்து இருக்கும் ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் அல்லது ஒரு டம்ளர்த் தண்ணீர் வழங்கப்படுகிறது .அதில் நீங்கள் கொஞ்சமேனும் பருகித்தான் ஆகவேண்டும் .வெளியே இருந்து வருகிறோம் வெய்யிலுக்குத் தருகிறார்கள் என்றுதான் உங்களைப் போல நினைத்துக்கொண்டு இருந்தேன்.அதாவது மாசறு எமாட்டோ Masaru Emoto என்ற ஜப்பானிய நீர் மூலக்கூறு ஆராய்சியாளரின் கட்டுரை வாசிக்கும் வரை.அப்புறம்தான் தெரிகிறது மனித எண்ணங்களின் தன்மை நீர் மூலக்கூறு பாதிப்பை ஏற்படுத்தி அதற்குரிய வடிவத்தை தருகிறது என்பதை.அப்படியானால் உங்களுக்குக் கொடுக்கப்படும் தண்ணீர் உங்கள் தாகத்திற்கு மட்டுமல்ல அந்த வீட்டினரின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் உங்களை இணக்கமாக்கிக் கொள்ளத்தான்.

அதெப்படி இது சாத்தியம் ? இது நிரூபிக்கப் பட்டதா ?



ஆமாம். ஒரு இடத்திலிருந்து மட்டுமல்ல உலகம் முழுவதுவும் உள்ள முக்கிய நதிகள்,ஏரிகள் மற்றும் குழாய் நீர்களைக் கூட விட்டு வைக்கவில்லை.அத்தனையும் எடுத்து ஒரு பாட்டிலில் தனித்தனியே சேமித்து அந்தப் பாட்டில்களில் வெவ்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு மாசறு எமாட்டோவால் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது .

முதல் சோதனை உள்ள நீருக்கு அருகே சிடி மூலம் பீத்தோவானின் சிம்பொனி Pastoral ( Symphony No. 6 ) மொசார்ட்டின் G minor (Symphony No. 40) போன்ற இசையைப் பரப்புவது.

அடுத்த சோதனை பாட்டிலில் உள்ள நீரில் நல்ல பாசிட்டிவ் எனெர்ஜி உள்ள திபெத்திய Prajnaparamita Sutras மந்திரங்களைச் சொல்லுவது,

  அடுத்துச் சேமிக்கப்பட்ட பாட்டில்களின் வெளியே LOVE YOU , THANK YOU, WISDOM , TRUTH போன்ற வார்த்தைகள் மற்றும் சூரியன்,டால்பின்,யானை,தாமரை போன்ற ஃபோட்டோக்களை ஒட்டி வைப்பது

    மேலும் முத்து ,பவளம்,போன்ற இயற்கை கற்களும் நீருக்குள் இட்டு .

  இப்படித் தனித்தனியே சேமிக்கப்பட்ட நீரை மைனஸ் 25 முதல் மைனஸ் 30 வரை உறைய வைத்து ஐஸ் கியூப்களாக்கி அந்தக் கியூப்களை sequence photographs (with a magnification of 100X too 200X ) மூலம் பெரிது படுத்திப் பார்க்கும் போது அம்மாதிரி சேமிக்கப்பட்ட நீரின் மூலக்கூறுகள் அந்த உள்வாங்கிக் கொண்ட தன்மைக்கு ஏற்ப அதன் ஹைட்ரஜன் ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து அழகிய clusters கொத்துப்போன்ற வடிவங்களும் crystals படிக போன்ற தனித்துவமானத் தோற்றங்களை வெளிபடுத்தின.அதாவது நீருக்கு அதனோடு தொடர்பு கொள்ளும் எதனையும் நினைவில் வைத்து அதனை வெளிப்படுத்துகிறது என்பதே இந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடு . 




          இதே போல மேலே சொன்ன எல்லாச் சோதனைகளின் எதிர்மறைத் தன்மையுடைய மோசமான இசை,அதிருப்தியான வார்த்தைகள்,படங்கள் வைத்தும் சோதிக்கப்பட்டன அவற்றை உள்வாங்கி வெளிப்படுத்திய நீரின் மூலக்கூறுகள் வெளிப்படுத்திய வடிவமும் இல்லாத கலங்களான வடிவங்களாக வெளிப்படுத்தின. 


நம் கலாச்சாரத்தில் நீருக்கும் அதனோடு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை நம் பழம்பெரும் நூல்கள் அஸ்டாங்க ஹ்ருதயம் போன்ற நூல்கள் பேசுகிறது. தெய்வீகம் பொருந்தியதென நம்பப்படும் கோயில் குளத்து நீர், புனித ஆற்று நீர், கோயிலில் அர்ச்சகர்த் தரும் நீர், பால் போன்றவைகளை நாம் தீர்த்தம் அல்லது புனித நீராக மதிக்கிறோம். 

நம் பூமிப்பந்தின் 24,900 மைல் (40,070 கி.மீ) சுற்றளவில் 72 சதவிகிதம் நீரால் சூழப்பட்டுள்ளது.அதே போல மனித உடம்பு ஆண் 60%,பெண் 55%,சிறுவர்கள் 65%.குழந்தைகள் 75% நீரால் நிரப்பப் பட்டுள்ளது ( Updated June 01, 2018 By Anne Marie Helmenstine, Ph.D..) இப்படி இருக்கும் மனித உடலின் நீர்தன்மை அவர்கள் எண்ணத்தால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருக்கும் என்பதைக் கணக்கிட்டுகொள்ளலாம். 


அதனால்தான் முனிவர்கள் ரிசிகள் கூட பித்தளை ,செம்புப் பாத்திரத்தில் சேமித்து வைத்து அப் பயதைன்படுத்தினார்கள்.அந்த உலோகங்களுக்கு நீரின் பதிவுகளை நீக்கும் குணம் இருப்பதாக அவர் அறிந்து இருந்தார்கள்  வைத்து இருந்தார்கள்

யார் வீட்டிலாவது தண்ணீர் கொடுத்தால் வாங்கி வைத்து விட்டு நீங்கள் போன வேலையை முடித்து விட்டுப் பிறகு அருந்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள உலகின் நீர் மருத்துவர் என்றழைக்கப்பட்ட Masaru Emoto வை நினைத்துக்கொள்ளுங்கள் . 

Friday, March 30, 2018

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அதிருஷ்டானம் - நெரூர்



 ஒரு  ஞானியின் வாழ்ந்த இடத்தை விடவும் அவர் ஆதியோடு அந்தமாய் தன்னை இணைத்துக்கொண்ட உயிரை உடலுக்குள் சுவர விட்டு  சம ஆதியான இடத்தில் பஞ்சபூத அணுக்களுக்குள் சூட்சுமமாய் அவர் எண்ணங்களை தாங்கி நிற்கிறது .

அது இன்னொரு ஆன்மாவை தூண்டியெழுப்பும் ஆற்றலை சதா வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது .அப்படி ஒரு ஆற்றல் களமான  கரூர்  புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருமுக்கூடல் செல்லும் 4 ம் நம்பர் பேருந்தில்  10 கிமீ சுமார் தொலைவிலிலுள்ள நெரூர் - ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் அதிருஷ்டானத்தை தரிசித்த அனுபவமே இங்கு மலர்கிறது .

திருமூலருக்கு பின் சித்த யோக மார்க்கத்தின் யோக நிஷ்டையின் உயர்ந்த நிலைகளின் சிகரங்களை எல்லாம் சுயஅனுபவ ரீதியாக துல்லியமாக ஆராய்ந்து அறிந்தவர் எனும் பெருமையை பெற்ற சிலரில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளூம் ஒருவர். பிரம்மேந்திராள் கையாண்ட ஸ்தூல உடலை நெரூரிலும் , சூட்சும உடலை  பாகிஸ்தான் கராச்சியிலும், காரணச் சரீரத்தை மானாமதுரையில் உள்ள ஆனந்த வல்லியம்மன் கோவில் உட்பட மூன்று இடங்களில் சமாதியடைந்துள்ளகள் இதுவரை யோக சாதனையில் எவருமே துணிந்து செய்திராத முறைகளாகும்.

கவனமில்லாது  சதாசிவர் அதிருஷ்டானம் என் நினைத்து ஒரே சுற்று சுவரால் சூழப்பட்ட ஸ்ரீ கைலாச ஆஸ்ரமத்திற்குள் பிரவேசித்து விட்டோம்.அங்குள்ள ஸ்ரீலஸ்ரீ சதாசிவானந்த சுவாமிகள் சமாதி பராமரிக்கப்பட்டு வருகிறது.

அங்கு தரிசனம் நிகழ்த்தி விட்டு,புறப்படும்போது எப்போதும் எங்கு சென்றாலும்  என் பழக்கத்தில் ஒன்று ஸ்தல வரலாறு வாங்குவது.அப்படி ”ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரித்திரச் சுருக்கம்” என்ற பெயரில் இருந்தது. வாங்கிக்கொண்டோ.பிறகு அதே வளாகத்திலுள்ள ஸ்ரீ சதாசிவரின் அதிருஷ்டானத்தின் பின் வழியாக பிரவேசித்தோம்.


வழக்கமாக சதாசிவரின் அத்ருஷ்டானத்தில் வியாழக்கிழமையும், சித்ரா பெளர்ணமி, மற்றும் வைகாசி மாதம் சுத்த பஞ்சமி தொடங்கி தசமி வரை சிறப்பாக விசேஷங்கள் ஆராதனை நடைபெறும்.  ஜீவசமாதிகளுக்கு சென்றி தியானிக்க விரும்புவர்கள் மிகச் சாதரண நாட்களில் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர் சுகுமாருடன்  அந்த ஞாயிறை தேர்வு செய்து சென்றோம்.ஆனால் தியானிக்க வந்தவர்களைக் காட்டிலும் அங்கு சதாசிவருக்கு அர்ச்சனை செய்ய வந்தவர்களே அதிகமிருந்தனர்.


எனது சொந்த அபிப்ராயப்படி ஜீவ சமாதியென்பதை சூட்சுமம் நிறைந்த சமுத்திரமாகவே உணர்கிறேன் .அவைகள் வழக்கமான பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்குச் செய்ய வெண்டிய  கோவில்களின் ஆகமங்கள் மற்றும் மந்திர,யந்திர,தந்திர விதிகளுக்கு கடந்து நிற்பவை .அதன் தன்மை வேறு ஆனால் நாம் எல்லாவற்றையும் கோவிலாகவே மாற்ற முயற்சிக்கிறோம்.

ஞான யோகத்தின் சாட்சியான ஜீவ சமாதிகளின் அடையாளங்களை தொலைக்கிறோமோ என்ற கேள்விகள் அச்சத்தை தருவிக்கின்றன.ஜீவ சமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் அந்த ஜீவ சமாதியின் மீதிருந்து எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம் அவற்றை வலம் வரும் போது, அந்த அதிர்வுகளானது நம் மனதால் உட்கிரகிக்க, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்து விடும். பல மகான்கள் ஜீவ சமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம்.

இரண்டு முறை தியானத்தில் அமர்ந்தோம்.

சகஸ்ரார யோக தவமான துரியத்தில் அற்புதமான விழிப்பு நிலை கிடைத்தது.

பொதுவான தியான வழக்கப்படி வெறும் தரையில் அமர்ந்து தியானம் செய்வது உகந்தது அல்ல .அங்கு சில தியான விரிப்புகள் இருந்தது.ஆனால் அவை அளவில் மிகச் சிறியது.ஒருவேளை அங்கு தியானம் செய்ய முக்கியத்துவம் இல்லை என்பதை நேரடியாக அதன் மூலம் சொல்லுகிறார்களோ என்னவோ ?


சரி இனி இந்தப்பதிவின் உள்நோக்கத்திற்குள் பிரவேசிப்போம்…

அதிருஷ்டானத்தைச் சுற்றி விட்டு ( இப்போதுதான் சரியான ) முன் வாசலுக்கு வந்தோம்.அங்குள்ள அலுவலக அறை முன் உள்ள நூல் விற்பனை டேபிளில், ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சேவா ட்ரஸ்ட் வெளியீட்டின் மூலம் – ”ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதம்”நூல் விற்பனைக்கு இருந்தது.
நாங்கள் ஏற்கனவே ஸ்ரீகைலாச ஆஸ்ரமத்தில் வாங்கிய நூலைக் காண்பித்து இதுவும் அதுவும் ஒன்றா என்று அங்கிருந்த விற்பனை செய்பவரைக் கேட்டோம்.அதற்கு இங்கு விற்பனை செய்யும் சரிதமே சரியானது அங்கு (ஸ்ரீகைலாச ஆஸ்ரமத்தில்)விற்பனை செய்வது இதை காப்பி அடித்து என்றார்.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் என்ற ஞானிக்கு ஒரே வளாகத்திற்குள் இரண்டு வெவ்வேறு சரிதம் உருவாக்கப்பட்டு இருக்கிறதா ?
ஒரு பாடத்திற்கு இரண்டு விதமான டெக்ஸ்ட் புத்தகம் எப்படி இருக்க முடியும் ?  என்ற கேள்வி எழுந்தது.

அதையும் வாங்கிக்கொண்டோம்.



இல்லத்திற்கு திரும்பியவுடன் இரண்டு சரிதமும் படித்தேன் .
காப்பி அடிக்கப்பட்டதாக சொன்ன ஸ்ரீகைலாச ஆஸ்ரம ”ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரித்திரச் சுருக்கம்” விரிவாக இருந்தது.

 பல முக்கிய இடங்கள் இரண்டும் சரிதமும்  வித்தியாசப்பட்டன.

அதில்முக்கியமாக ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்  ஜேஸ்ட சுத்த தசமியில் தனது சமாதி நாளை தேர்வு செய்து அதை  தஞ்சை, மைசூர்,புதுக்கோட்டை மன்னர்கள் மூவரிடமும் தனது மனதின் வலிமையால் அவர்களுக்கு உணர்த்தினார் என்கிறது  ஸ்ரீகைலாச ஆஸ்ரம சுருக்கச் சரிதம் (பக்கம் 37 ) அதே நிகழ்வை (தன்னை அசல் என்று சொல்லிக்கொள்ளும்) ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சேவா ட்ரஸ்ட் சரிதம் அப்போது அவர் (ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்) சில பிராமணர்களை அழைத்து ( பக்கம் 24 ) சொல்லப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

என்னதான் யூகவரலாறானாலும் எப்படி  மூன்று அரசர்கள் அழைக்கப்பட்ட ஒரு நிகழ்வு இங்கு நீக்கப்படுகிறது ஏன் என்ற தேடலுடன் இணையத்தில் தேடத்தொடங்கினேன் …

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் விக்கிப்பீடியாவில் ”தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சதாசிவ பிரமேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, தோழன் எனும் புதினத்தை எழுதியுள்ளார் என்று அறிந்து ,கோவை விஜயா பதிப்பகத்தார் மூலம் வாங்கி வாசித்தேன் (சுமார் 165  பக்கம் ) அதில் திரு.பாலகுமாரன் தஞ்சை, மற்றும் புதுக்கோட்டை  இரண்டு மன்னர்களை மட்டும் மனதால் வரவைத்தார் என்று ( 170 பக்கம் ) சொல்லப்பட்டு இருந்தது.

அப்படியானால் யாருக்காக இது மாற்றப்பட்டது ?
இன்னும் கூட பல கேள்விகள் எழுகிறது.

1. ஜகத்குரு ஸ்ரீ பரமசிவேந்திராள் அவர்களால் சீடனாக எற்றுக்கொள்ளப்பட்ட சிவராம கிருஷ்ணன் ,ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் என்று முழுமை நோக்கி நகர்ந்து இருக்கிறார்

2. தஞ்சை , மைசூர் ,புதுக்கோட்டை மன்னர்களோடு தொடர்பிலிருந்து இருக்கிறார்.

3. மானஸ ஸஞ்சரரே, சர்வம் ப்ரம்ம மயம், பிபரே ராமரஸம், ப்ரூஹி முகுந்தேதி போன்ற பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும், பிரம்ம சூத்ர வ்ருத்தி, ப்ரம்ம தத்வ பிரகாசிகா, யோக சுத்தாகரா, ஆத்ம வித்ய விலாஸம் போன்ற பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

இத்தனையிருந்தும் இவர் வரலாறு நம்மிடம் முழுமையாக்கப்படவில்லை .
இதற்கு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சேவா ட்ரஸ்ட் ஏன் முயற்சி செய்யவில்லை ?

யார் மீதும் குறை சொல்ல வேண்டும் என்பது இந்தப் பதிவில் என் உள்நோக்கம் அல்ல.நாம் அந்த மாபெரும் ஞானியின் பெருமைகளை ஏன் அகன்ற மனதோடு ஆழமாக பதிவு செய்யக்கூடாது என்ற ஆதங்கமே அல்லது கோரிக்கையே என் பதிவின் நோக்கம் .

Saturday, January 13, 2018

உலகப் படைப்பின் காரணம் - காஞ்சிப் பெரியவரும் , வேதாத்ரி மஹரிசியும்



        காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை காஞ்சி மடத்தில் கனகாபிசேகம் முடிந்த தருவாயில் அவரைத் தரிசிக்கும் போது அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த சொற்ப ஞானம் அவரைக் கைகூப்பி தொழுவதற்குக் கூட தோணவில்லை.ஆனால் வேதாத்ரி மஹரிசி போன்ற தத்துவ ஞானிகளின் ஆசீர்வாதத்தால் பெரியவாவின் தீட்சன்யத்தை உணர்ந்து பிரமிக்க வைக்கிறது .

    பெருவெடிப்புக் கோட்பாடுக்குப் (Big Bang Theory) பிறகு நாம் வாழும் பூமி,சூரிய மண்டலம்,அது சுழலும் பால்வெளி மண்டல அச்சு..அடுத்து 25,000 ஒளியாண்டு தூரத்தில் தொடங்கி Centaurus A Group அண்டம் தொடங்கி 127 ஆவது NGC 4945 அண்டம் வரை பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டேயிருக்கிறது என்பதை விஞ்ஞானம் பட்டியலிடுகிறது.

           பெருவெடிப்பு கொள்கைக்கு முன் இந்த வரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சமும் அதற்கான உள்ளடங்கிய மாபெரும் சக்தியும் எங்கிருந்தது என்பதை விஞ்ஞானம் தலைகீழாக நின்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது நம்மை இறைவன் உலகைப் படைத்தார் என்று நம்மை ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தது பக்திலோகம்.ஆனால் அதற்கான காரணத்தை மறைபொருளாக வைத்தது.


                      வீடுகளில் அம்மா - அப்பா கல்யாண வீடியோக்கள் அல்லது ஆல்பங்களை பார்த்து விட்டு அங்கு தன்னைக்காணாமல், வீட்டுக் குட்டீஸ்கள் அந்தச் சமயத்தில் நான் எங்கே அம்மா இருந்தேன் என்று கேட்கும்போது நாம் ஒரு அற்புதமான பதிலை தருவோமே கடவுளிடம் என்று அதுபோலத்தான் இன்றும் பிரபஞ்ச ஆரம்ப தொடக்கப்புள்ளியைப் பற்றி பேச ஆன்மிகவாதிகள் தயங்கி கொண்டு இருந்தபோது இன்று அதை மிக வெட்ட வெளிச்சமாக சுத்தவெளி என்ற பரிபூரணமே பிரம்மம்,கடவுள்,ஆதி,அனாதி என்று பேசப்படும் அதுவே தன்னைத்தானே இறுக்கி Self Compressive force, தனக்குள்ளாகவே நுண்ணதிர்வாக மாறி Kinematic Quivering Motion இந்த உலகில் Cosmic Formative Dust என்ற நிலையிலிருந்து அணுவாகமாறி ,ஐந்து பௌதீகமாகி இன்று மனிதன் வரை அதைச் சிந்திக்கும் ஆறாவது அறிவாகச் செயலாற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை வேதாத்ரி மஹரிசி தனது உள்ளுணர்வின் வழித்தடத்தின் மூலம் ஒரு பாதையை உணர்ந்து சொல்லி வைத்தார்.







அதை மஹா பெரியவர் , இந்த உலகத்தின் ஆரம்ப புள்ளியை யாரும் தோற்றுவிக்கவில்லை அதுவே தன்னை வெளிக்காட்டிக்கொண்டது என்பதை ,

“ஆரம்ப வாதமுமில்லை. பரிணாம வாதமும் இல்லை. பிரம்மம்தான் மாயா சக்தியால் இதனை ஸ்ருஷ்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது.
பரமாத்ம குயவனுக்கு வேறாக ஒரு மண்ணே இல்லை. அதனால் ஆரம்பவாதம் சரிப்படாது. பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது –
என்று தொடங்கி வைத்து , ரா.கணபதியின் – தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் பேசுகிறார்….

நிமித்தக் காரணம், உபாதானக் காரணம் என்று இரண்டு உண்டு. ஒரு பானை இருந்தால் அது உண்டாவதற்கு மண் என்று ஒரு வஸ்து இருக்க வேண்டும். மண்தான் பானைக்கு உபாதான காரணம். ஆனால் மண் எப்படிப் பானையாக ஆகும்? தானே அது ஒன்று சேர்ந்து பானையாகுமா? குயவன்தான் மண்ணைப் பானையாகப் பண்ண வேண்டியிருக்கிறது. மண்ணினால் ஒரு பானை உண்டாக வேண்டுமானால் அதற்குக் குயவன் என்ற காரணமும் வேண்டியிருக்கிறது. குயவன்தான் நிமித்த காரணம். ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் சொன்ன நிமித்தம் வேறு, இந்த நிமித்தம் வேறு.
அணுக்களை உபாதானக் காரணமாகக்கொண்டு ஈச்வரன் என்கிற நிமித்த காரணம் ஜகத்தைப் பண்ணியிருக்கிறது என்பது நியாய, வைசேஷிகக் கொள்கை.

மண்ணைப் பானையாக்குவதற்குக் குயவன் அவசியம் வேண்டும். அவன் இல்லாவிட்டால் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை என்ற விளைவை மண்ணிலிருந்து குயவன் உண்டாக்குகிறான் என்று சொல்வார்கள். இதற்கு ஆரம்பவாதம் என்றும், அஸத், கார்ய வாதம் என்றும் பெயர். ‘ஸத்’ என்றால் இருப்பது. ‘அஸத்’ இல்லாதது. வெறும் மண்ணிலே பானை இல்லை. இல்லாத பானை அதிலிருந்து விளைந்தது. இப்படித்தான் ஈச்வரன் அணுக்களைக் கொண்டே அணுக்களில் இல்லாத சிருஷ்டியைப் பண்ணியிருக்கிறான் என்கிறார்கள். இது நியாய கொள்கை.

‘ஐஸ்’ உத்தேசம் கொண்டதா


ஸாங்கியர்களுக்குக் கடவுளே கிடையாது என்று முன்னேயே சொல்லியிருக்கிறேன். அவர்கள் பிரகிருதி என்ற இயற்கையே ஜகத்தாகப் பரிணமித்தது என்பார்கள். இது இந்தக் காலத்து நாஸ்திகர்கள் சொல்வது மாதிரியே என்று நினைத்து விடக்கூடாது. ஏன் என்றால் நிர்குண பிரம்மத்தின் ஸ்தானத்தில் இருக்கப்பட்ட, சுத்த ஞான ஸ்வரூபமான ‘புருஷன்’ என்பவனையும் ஸாங்கியர்கள் சொல்வார்கள். ஜடமான ப்ரகிருதி இத்தனை ஒழுங்காக இயங்குவதற்கு புருஷனின் ஸாந்நித்தியமே காரணம் என்பார்கள்.
ஸாந்நித்தியம்தான் காரணம், புருஷனே நேராக ஈடுபட்டு ஸ்ருஷ்டியைச் செய்யவில்லை என்கிறார்கள். சூரிய வெளிச்சத்தில் தானாக பயிர் முளைக்கிறது, ஜலம் வற்றுகிறது, துணி காய்கிறது; ஸந்நிதி விசேஷத்தாலேயே இவை நடக்கின்றன. சூரியன் இங்கே உள்ள இன்ன பயிரை முளைக்கப் பண்ண வேண்டும், இந்தக் குட்டையிலுள்ள ஜலத்தை வற்ற வைக்க வேண்டும் என்று நினைத்தா இவை நடக்கின்றன? `ஐஸ்` கட்டியைத் தொட்டால் கை மரத்துப் போகிறது.

அதனால் அந்த `ஐஸ்` நம் கையை மரக்கப் பண்ண வேண்டும் என்று உத்தேசித்ததாகச் சொல்லலாமா? இப்படித்தான் புருஷன் ஸ்ருஷ்டியிலே கொஞ்சங்கூடப் பட்டுக் கொள்ளாவிட்டாலும் புருஷனிடமிருந்து பெற்ற சக்தியாலேயே பிரகிருதி இத்தனையையும் தன்னிலிருந்து தானே உண்டாக்கிக் கொள்கிறது. நிமித்த காரணம் என்பதாக ஈச்வரன் என்று ஒருவன் பண்ணவில்லை. பிரகிருதியே இப்படி ஸ்ருஷ்டியாகப் பரிணமித்திருக்கிறது என்பது ஸாங்கியர் கொள்கை. இதற்குப் பரிணாமவாதம் என்று பேர்.

ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான்

 
அஸத், கார்ய வாதத்திற்கு மாறாக ஸாங்கியர்கள் ஸத், கார்ய வாதத்தைச் சொல்கிறார்கள். உபாதானக் காரணமான மண்ணிலே இல்லாத பானையை நிமித்த காரணமான குயவன் பண்ணினான் என்று அஸத், கார்யவாதிகள் சொல்கிறார்களல்லவா? ஸத், கார்யவாதிகளான ஸாங்கியர்கள், “மண்ணுக்குள்ளே பானை முதலிலேயே இருக்கத்தான் செய்தது. எள்ளுக்குள்ளேயே இருக்கிற எண்ணெய்யைத்தானே வாணியன் செக்கிலே ஆட்டி வெளிக்கொண்டு வருகிறான்? அதுபோல மண்ணில் மறைமுகமாக இருக்கிற பானைதான் பிறகு காரியத்தால் வெளியிலேயும் பானையாக வருகிறது.

மண்ணை உபயோகித்தால்தானே பானை வருகிறது? எள்ளை வைத்துப் பானை பண்ண முடியுமா? அல்லது மண்ணைப் பிழிந்து எண்ணெய் எடுக்க முடியுமா? பானையிலே இருப்பதனைத்தும் மண்ணின் அணுக்கள்தான். அந்த அணுக்களின் ரூபத்தை இப்படி ஒழுங்கு செய்ததால் பானை என்ற ஒன்று உண்டாயிருக்கிறது” என்பார்கள்.

நம் ஆசாரியாள், “ஆரம்ப வாதமுமில்லை. பரிணாம வாதமும் இல்லை. பிரம்மம்தான் மாயா சக்தியால் இத்தனை ஸ்ருஷ்டி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரமாத்ம குயவனுக்கு வேறாக ஒரு மண்ணே இல்லை. அதனால் ஆரம்பவாதம் சரிப்படாது. பரமாத்மா ஜகத்தாகப் பரிணமித்தது – பால் தயிராகப் பரிணமித்த மாதிரி என்றாலும் தப்பு. அப்படிச் சொன்னால் பால் தயிரானபின் தயிர்தான் இருக்குமே தவிர பால் இருக்காது. இம்மாதிரி பரமாத்மா, ஜகத் பரிணமித்தபின் இல்லாமல் போய்விட்டார் என்றால் அது மஹா தப்பல்லவா? அதனால் பரிணாமமும் இல்லை.

“தான் தானாக சுத்த ஞான ஸ்வரூபமாக ஒரு பக்கம் இருந்துகொண்டே இன்னொரு பக்கம் மாயையால் ஜீவ-ஜகத்துக்களாகத் தோன்றுகிறார். இதெல்லாம் ஒரே ஸத்வஸ்துவின் தோற்றம்தான், வேஷம்தான்.”


 இவ்வாறு முடிக்கிறார் மஹாபெரியவர்.


இரண்டு ஞானிகளும் ஒரே இடத்தையே ஒரே தளத்தில் நின்று சிந்திக்கிறார்கள் இதனால்தானோ ஞானிகளின் ரிஷி மூலம் ஒன்றுதான் என்பதைச் சிந்திக்க வைக்கிறது .

Thursday, August 24, 2017

'சண்டையிடு' அல்லது 'ஓடிவிடு ’.Fight of Flight


        சமையல் கத்தியே இன்னும் சரிவரப் பிடிக்கத் தெரியாதவனிடம் சாமுராய்க் கத்தியைக் கொடுத்துச் சண்டைக்கு நிறுத்தியது போல ஆகிவிட்டது இன்றைக்கு எனக்கு பேசக் கொடுக்கப்பட வகுப்பு.இரண்டு நாளைக்கு முன் திருப்பூரின் மிகப் மிக முக்கியமான அறக்கட்டளையிலிருந்து , ”மன அழுத்த மேலாண்மைஎன்ற வகுப்பு எடுக்க அழைப்பு வந்தது.மிகச் சிறந்த ஆசிரியர்களை மட்டுமே அழைக்கும் அந்த அறக்கட்டளையில் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைப்பது மிகப்பெரிய சந்தோசம் .அதுவும் என்னைப்போல ஆரம்ப நிலைத் துணைப்பேராசிரியர் பயிற்சி நிலையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய கௌரவம் !

      ஆனால் அந்த வகுப்பு அது யார் முன் எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்ன போதுதான் என் பேஸ் மட்டம் வீக்காகி விட்டது. காரணம் அரசு இடைநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சிஇரண்டு நாள் முகாமில் இந்தத் தலைப்பில் பேச வேண்டுமாம். வாழ் நாளெல்லாம் எவர்கள் முன்னாடி ஒளிந்து கொண்டு திரிந்தோமோ அந்த ஆசிரியர்கள் முன்னாடி பேச வேண்டுமே என்பது மிகப்பெரிய சவால் என்று தோணியது.இது மட்டுமல்ல அந்த அறக்கட்டளை மூத்த பேராசிரியர் ஒருவரால் அங்கு பேசும் விசயங்கள் பதிவு செய்யப்பட்டு உற்றுக் கவனிக்கப்படுகிறது.தவறுகள் விவாதிக்கப்படுகிறது.அறிவுறுத்தவும் படுகிறது . இப்போது தலைப்பே என்னை சண்டையிடுகிறாயா ? என்று கேட்டது. 



        குரு மஹான் வேதாத்ரி மகரிசி சொல்லிக்கொடுக்காத, பேசாத, தொட்டுக்காட்டாத விசயங்களே இல்லை. விஞ்ஞான உலகம் ஃபெர்மியான்கள் ,போஸான்கள் என்ற அணுவிற்கு விசை தரும் துகள்களைத் துழாவிக்கொண்டு இருக்கும் போது வெற்றிடத்தில் எப்படித் துகள் உருவானது அது எப்படி அலையானது என்ற அண்ட வெளி ரகசியத்தில் துவங்கி இன்று மனிதப் பரிணாமத்தின் முழுமைப்பேறு வரை விரித்துப் பேசி விட்டார். ஆனால் என் பயம் என்னுடையது.இத்தனை நாள் கை கட்டி பிரம்புக்கு பயந்து வாழ்ந்த ஆசிரியர்கள் முன்னின்று பேசுவது எப்படி என்பதுதான் அது .மேடையும் , மக்களும் அதேதான் ஆனால் ஆசிரியர்கள் என்றால் ஒரு பயம் ஆழ் மனதின் பாகுபலியாய் உட்கார்ந்து கொண்டு இதுவே என் சாசனம் என்று கட்டளையிடுகிறதே என்ன செய்வது

           இரண்டு நாள் என்னிடம் உள்ள குருவின் நூல்கள் ,அவர் பேசிய உரைத்தொகுப்பு, நூலகப் புத்தகங்கள் அனைத்திலும் உள்ள குறிப்புகளையும் , இணையத்தின் மூளை முடுக்கெல்லாம் துலாவித் சேகரித்தேன். ஆனால் எப்படி இந்தப் பேச்சை 30 நிமிடத்திற்குள் பேசித் தெளிவு படுத்துவதற்கான வடிவமைப்பு கடைசிவரை சவாலாக இருந்தது.என் போன்ற ஆரம்பப் பேச்சாளனக்கு ( ! )  நம்மை பேச வாய்ப்பு அளித்து அழைத்தவர்களுக்கு நம் சிந்தனையுரைத் தெளிவாகத் திருப்தி படுத்தினால்தான் அடுத்த அழைப்பு இன்னும் முக்கிமானதாகக் கிடைக்கும் .இப்படித்தான் எனது அறக்கட்டளையில் பேசத்தெரியாது என்பதற்காகப் பாடத்தில் அதிகம் விரிவாக இல்லாத நாடி சுத்தி தண்டு வட சுத்தி தலைப்புகளை மட்டுமே சுத்திச் சுத்திக் கொடுத்தார்கள் .ஒரு கட்டத்தில் எனது பலவீனத்தை உணர்ந்தேன் .எப்போதுமே நம் மேடை ஏறிப் பேசும் நமக்குத் திருப்தித் தரவேண்டும்.அது கீழே கேட்கவிருக்கும் மக்களைப் போய்ச் சேரவேண்டும் இதல்லாத பேச்சு அடுத்தவர்கள் நேரத்தைப் பறிப்பதற்கான  பாவம் என்று உணர்ந்தேன். 

         தியானத்திற்கு முன் செய்யப்படும் அல்லது தியானத்திற்கு முன் உப தியானமாகக் கருதப்படும் இந்த நாடி,தண்டுவடச் சுத்திப் பயிற்சிகளின் முக்கியதுவத்தைப் பல கோணத்தில் தேடத் தொடங்கிய போதுதான் அள்ள அள்ளக் குறையாத ஆன்மீக ஊற்று வெளிப்படத் தொடங்கியது.வெறும் எழுபத்தி ஈராயிரம் நாடிகள் உடலில் இருக்கிறது என்பது மட்டுமே பேசிக்கொண்டு இருந்த எனக்கு அது படைப்பின் இருமை நிலையின் குறியீடாக ஈடா மற்றும் பிங்களா என்பது என்ன இந்த இருமை நிலையை நாம் சிவா மற்றும் சக்தி என்று ஏன் உருவகப்படுத்துகிறோம். சக்தி உடல் மூலமான நாடிகள் ஆமை வடிவத்தில் எங்குத் துவங்குகிறது தொடங்கி எங்கு முடிகிறது ? அதன் வடிவம் என்ன ? அதனுள் பயணிக்கும் சக்தி ஓட்டத்தை எப்படி உணர்வது போன்ற ஆழங்கள் பிடிபட்டது.இந்த ஆழம்தான் மேடையில் தத்தித் தத்திப் பேச்சாற்றலைத் தரிசித்துக் கொண்டு இருந்த என்னை வாய்ப்பளித்தவர்களுக்குக் வெளிச்சமிட்டுக் காட்டியது. 


     ஆனால் இங்குப் பிர்ச்சனை வேறாயிற்றே ? கற்றறிந்த ஆசிரியர்கள் முன்னால் பேசுவதற்கு நிறைய தயாரிப்புகள் வேண்டும் பேசும்போது அது நூல் தொடர்பாய் கருத்தோடு பயணிக்க வேண்டுமே ? என்ன செய்வது தொய்வான இடங்களில் நகைச்சுவையும் கலந்து நிற்க வேண்டும்.மிகுந்த குழப்பத்தால் இந்த வாய்ப்பு இந்தப் பேச்சை என் குறைவான அனுபவ திறத்தால் வடிவமைக்கப் பிடிபடவில்லை. எப்போதும் போலக் குருவை நம்பினோர் கைவிடப்படார் என்ற வாக்குப்படி அவரிடமே ஒப்படைத்து என்னைச் செலுத்த வேண்டிக்கொண்டேன்.மதியம் 2.10 க்கு மேடை கொடுக்கப்பட்டது. 

கொஞ்சம் வரலாறு ...
ஆதி மனிதன் குகையில் வாழ்ந்த காலத்தில் துவங்கி,1700 களில் துவங்கிய தொழிற் புரட்சி அதனால் வேட்டையைத் தொழிலாகக் கொண்டு உருவான மனித மூளையின் அடுத்தக் கண்டுபிடிப்பான 1800-1900 களில் உருவான முக்கியமான விளையாட்டுக்கள் 

கொஞ்சம் அறிவியல் ...
பிறகு நடந்த அறிவியல் கருவிகளின் கண்டு பிடிப்புகளின் தொலைந்து போன மனித உழைப்பும் அதோடு ஒத்துப் போகாத மூளை ரசாயன அமைப்பின் போராட்டமும் மனித உடலியல் சோர்வுக்கு என்றதோடு

கொஞ்சம் அன்மீகம் ...
வேதாத்ரி என்ற தத்துவ ஞானி வரும் முன் காப்போம் என்ற முக்காலச் சிந்தனையில் உருவாக்கிய உடற்பயிற்சியான கால்பயிற்சியின் -   தசைநார் ,மூச்சுப்பயிற்சி ,கபாலபதி, அக்குப்பிரசர் ,உடல்தளர்த்தல்,  போன்ற பயிற்சிகள் மூலம் குறைக்கப்படுகிறது என்றும் முக்கியமாக காயகல்ப பயிற்சி பயன் பற்றியும்,

     மன அழுத்தம் தரும் முக்கிய நாளமில்லாச் சுரப்பியான அட்ரினல் மற்றும் அதன் பகுதியான கார்டெக், மெடுல்லாச் சுரப்புகள் நம்மை நம் உடலின் ஆளுமைகள் பற்றிப் சொல்லி அது எப்படிப் பஞ்சேந்திரிய , நித்தியானந்த , ஒன்பது மையத் தவங்களிலும் மற்றும் சாந்தி யோகத்தில் எப்படி ஊக்கம் பெறுகின்றன என்பதோடு

        இதெல்லாம் தாண்டி அகத்தாய்வில் கவலை ஒழித்தல் மூலம் அனுபவித்துத் தள்ளிபோட்டு,அலட்சியம் செய்து ,உடனடியாகத் தீர்க்க வேண்டிய கவலைகளின் அகங்களைத் பற்றித் தொட்டுக் காட்டிக்கொண்டு இருக்கும்போதே கொடுக்கப்பட்ட முப்பது மணித்துளிகள் முடிந்தது. 



         இந்த வாய்ப்பின் மூலம் தேடிய விசயங்களில் இன்னும் பல மேடைகளுக்கான கருத்துக்கள் நிறையக் கிடைத்தது.இன்றைய இந்திய மக்களில் 2% மனநோயால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும்,இந்த வரிசையில் 20% மறைமுகமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது.அதோடு இதன் அறிகுறிகள்,படபடப்புத் துவங்கி மரணத்தின் வாசல் வரை இழுத்துச் செல்லும் வாய்ப்புகள் மிகவும் பயமுறுத்தியது. மன அழுத்த மேலாண்மைக்கு வழங்கப்படும் நவீன விலைமிகுந்த WHO ஆல் அங்கீகரிக்கப்படாத மருந்துகளின் பக்க விளைவுகள் இன்னும் பயங்கரம் !

          மேலம் சில நல்லவிசயங்களும் கிடைத்தது . மன அழுத்தம் குறைக்கும் உணவு முறைகளில் கீரைகள், பால் , ஆரஞ்சுப் பழம், டார்க் சாக்லெட் ,கார்ன் பிளக்ஸ் ப்ளுப் பெர்ரி , இன்னும் பல உணவுகளையும் அதன் வைட்டமின்கள், ஆண்டி ஆக்சிடன்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. இது மட்டுமா? மன அழுத்தம் குறைக்கும் தெரபிகளான மேக்னடிக்,ஸ்பா,ஐஸ்,ஸ்பைனல் கார்டின் மேல் நுண்ணிய நீரைப் பாய்ச்சி அடிப்பது ,நீராவிக் குளியல்,களிமண் பூச்சு,பற்கள் இல்லாத மீன்களைக் கொண்டு மூளைக்கு எண்டார்ஃபின் சுரப்பைத் தூண்டுவது,எண்ணெய் மசாஜ்,ரெஃப்லெக்சாலஜி,

        மேலும் மன அழுத்தம் மெல்ல மெல்லப் போக்கும் வீட்டு வளர்ப்புச் செல்லப்பிராணிகள் மற்றும் தாவரங்களான லெமன் கிராஸ்,மின்ட் துளசி,கிரீன் ரிலாஸ் என்று பட்டியல் நீண்டன. 

        ஆனால்  இவற்றில் மன அழுத்தம் குறைக்கும் யோகாசனங்கள் ,முத்திரைகள் பேசாமல் விட்டுவிட்டேன் என்பது என் குறை.அதோடு நமக்குப் பிடித்த இசையையும் சிலமனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்படச் செய்யும் ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி, அம்சத்வனி, பீம்பிளாஸ்,முகாரி , நாதநாமக்கிரியா போன்ற  ராகங்களைக் கேட்பதால் உடலில் ஹார்மோன் கார்டிசோல் அளவை இது குறைகின்றது . இதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது என்பது பற்றிக் குறிப்புகள் எடுக்காமல் போய் விட்டேன் .

அடுத்த மேடை அதைப் பேச வைக்க குருவருள் வாய்ப்புத்தரும்.



Saturday, June 11, 2016

வேதாத்ரி மஹரிசி முடித்து வைத்த கதை !

                    
       
 குரு மஹான் வேதாத்ரி மகரிசி அவர்களுக்கு அன்னை லோகாம்பாள் காவேரி என்ற ஒரு மாத இதழில் வந்து இருந்த ஒரு கதையைப் படிக்கக் கொடுத்தார்.அந்தக் கதையில், ஒரு அன்பான தம்பதியினர் பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள் . இதனால் அந்தப்பெண்ணை உற்றாரும் மற்றவரும் மலடி என மனம் நோகும்படி பழித்துக் கூறுவதைப் பொறுத்துக்கொள்ள இயலாத அந்தப்பெண் தனது கணவனை இரண்டாம் தாரமாகச் செய்ய வற்புறுத்துகிறாள் .ஆனால் அவள் கணவனோ தன் மனைவி மீதுள்ள அன்பினால் மறுமணத்திற்கு மறுத்து விட்டுத் தனது மனைவியைச் சமாதானப்படுத்தி விட்டு வெளியே போகிறான். வெளியே போனவன் இரவு திரும்பி வீடு வந்து பார்க்கும் போது மனைவியைக் காணவில்லை இரவு முழுதும் தேடுகிறான்.மறுநாள் காலை அவள் பிணம் காவேரி ஆற்றோரத்தில் ஒதுங்கியிருந்தது...என்று கதை முடிகிறது
               
           அந்தக் கதைப்படி உற்றார் உறவினர் பழிச்சொற்கள் ஒருபுறம் அவளைப் புண்படுத்தின.அந்த நிலைமை உணர்ந்து இரண்டாம் செய்துகொண்டு தன்னைப் பழிச்சொல்லிருந்து விடுவிக்க மறுக்கும் கணவனின் பிடிவாதம் ஒருபுறம் அவளைத் துன்புறுத்தின .அவள் அந்நிலையில் தொடர்ந்து உயிர் வாழ விரும்பவில்லை என்ற ஒரு பெண்ணின் மனதைப் படம் பிடித்துக் காட்ட அந்த எழுத்தாளன் அந்தக் கதையை எழுதியிருக்கிறார்.  மஹரிசியை அன்னை லோகாம்பாள் வாசித்துப் பார்க்கச் சொன்ன தருணம் மிக முக்கியமானது .அந்தக் கதையில் வரும் பெண்ணைப் போலவே அன்னை லோகாம்பாளும் தனக்கு திருமணமாகி ஒன்பதாண்டாகியும் குழந்தை இல்லையென்று வருந்தி அளவில்லா மனத்துயர் அடைந்து மஹரிசியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நாளுக்கு நாள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம் அது.

              ஆனால் அந்தக்  கதையை முடித்தவிதம் பற்றிக் கருத்தும் கூறும் மகரிசி அந்தக் கதாசிரியர் அந்தக்கதையை முழுமையாக முடிக்கவில்லை .இன்னும் தனது சிந்தனையை விரித்துக் கதையை முழுமையாக முடித்து இருக்க வேண்டும் என்று ஒரு கதாசிரியனின் பொறுப்பைச் சொல்வதோடு அந்தக் கதையை முழுமைப்படுத்தி அவரே முடித்தும் வைக்கிறார் பாருங்கள் ... 

”தனது அன்பு மனைவியை இழந்த கணவன் தனது பிரிவாற்றாமைத் தாங்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறிவன் பின்னர்த் திரும்பவேயில்லை.சில மாதங்கள் கழித்து அவனை ரிசிகேசத்தில் ஒரு சந்நியாசி வேடத்தில் பார்த்தாக யாரோ கூறினார்கள்:” 

                                                                                      என்பதாக அந்தக்கதையின் முடிவைச் சற்று நீட்டிமுடித்து இருக்க வேண்டும் என்கிறார் மகரிசி.அவ்வாறு அந்தக்கதை முழுமை பெறாத அக்காரணத்தால் தன் வாழ்வின் குறுக்கீடாக ஒரு பாறாங்கள் போல் நின்றது எனச் சொல்கிறார் .
                   
               
             ஒருவேளை இந்த கோணத்தில் அந்தக்கதை முடிவு இருந்திருந்தால் அன்னை தன் கருத்தை மாற்றி புரிந்து கொள்ள வாய்ப்பிருந்து தன்னை மறுமணம் செய்ய வற்புறுத்தி இருக்கமாட்டார் என மகரிசி நம்பினார்.ஆனாலும் பல ஆண்டுகள் கழித்து ஒரு சமயத்தில் யாரோ ஒருவர் மகரிசியை உங்களுக்கு குழந்தை இருக்கிறதா ? என்று கேட்டபோது இல்லை என்று சொல்ல வந்த மஹரிசியை தடுத்த அன்னை, ஏங்க அப்படி சொல்றீங்க நமக்குத்தான் எத்தனை ஆயிரம் குழந்தைகள் இருக்கிறது ? என்று  அளவுக்கு பக்குவமும் பெற்றவர் ஆனார் என்பதை நாம் அறிகிறோம் .அதனால்தான் நம் குருவின் அறிவுறுத்தல்படி அன்னை லோகாம்பாள் பிறந்த நாள் ஆகஸ்ட் 30  மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாப்படுகிறது .

Tuesday, May 31, 2016

குருவை இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்..


பிரிவு உபச்சார விழா !

                                சென்ற ஞாயிறு ( மே 29 ) சாமுண்டிபுரம் அறிவுத் திருக்கோவில் விசன் மாணவர்கள் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. 

             தமிழில்தான் இப்படிப்பட்ட பெயர் இருக்கும் பிரிவு உபச்சார விழா .பிரிவைக்கூட உபச்சாரம் செய்து அனுப்புபவன் தமிழன் மட்டுமாகத்தான் இருக்கும் .46 மாணவர்களுடன் தொடங்கிய இந்த ஒரு வருட பயணத்தில் திட்டஅலுவலர் ( Program Officer ) என்ற பொறுப்பில் குருவருளின் துணையோடு இருந்திருக்கிறேன் .வித்தியாசமான பல அனுபவங்கள் இந்தக் காலக் கட்டத்தில் நடைபெற்றது .இங்கு என்ன செய்தேன் என்பதைவிடவும் என்ன செய்யவேண்டும் என்பதைத்தான் அதிகம் தெரிந்து கொண்டேன் .மிகப்பொறுப்புள்ள அலுவல்.இதில் எனக்கு நான் போட்டுக்கொண்ட மதிப்பெண் நூற்றுக்குப் பத்துதான்.எந்த ஒரு வேலையையும் நமக்குச் செய்து கொள்ளும் போது உணர்வுடன் கற்றுக்கொள்ளவேண்டும் அதையே மற்றவர்களுக்குச் செய்யும் போது உணர்வுடனும் நிர்வாகத்திறனுடனும் செய்யத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நெற்றிப் பொட்டில் அடித்தது போலச் சொல்லிக்கொடுத்திருக்கிறது. 


யோகமும் மனித மாண்பும்.

                              இந்தப் பிரிவு உபச்சார விழா தாங்கள் யோகமும் மனித மாண்பும் விசன் ஃபார் விஷ்டம் (vision for wisdom - yoga for human excellence ) பயிற்சிக்கு வரும் முன் உடல், மன,சமூகத்தொடர்பில் எப்படி இருந்தார்கள் என்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் அதன் மூலம் இன்னும் குருவின் சேவையில் தன்னைத் தொடர்ந்து இணைத்துக்கொண்டு மேலும் கல்வி மற்றும் சேவையில் தொடர ஒரு வாசல் போன்றது இந்த விழா . அவர்கள் படிக்கும் போது பல நிகழ்ச்சிகள் வாயிலாகச் சொல்லையிருந்தாலும் ஒரு பலன் பெற்ற சந்தோச அனுபவத்தின் போது பேச இன்னும் பயனுள்ளதாக இருக்கும் . ஏனென்றால் வேதாத்ரியம் என்பது முழுக்க முழுக்க நடைமுறை சார்ந்த (Practical Oriented) கல்வியும் அதன் மூலம் பயன் பெறும் உள்ளுணர்வு அனுபவம் .இதை வேறு ஒருவர் அனுபவத்திலிருந்து பெற முடியாது . நாமே முயன்றால் மட்டுமே அதை அனுபவிக்க முடியும் .வாரம் (ஒரு நாள் விட்டு ஒரு நாள்) மூன்று நாள் வகுப்புக்கு காலை 5.30 க்கு (அல்லது பகல் பத்து மணிக்கு ) வர வேண்டும் 45 நிமிடம் உடற்பயிற்சி மற்றும் யோகாசனம் அடுத்த 30 நிமிடம் தியானம் கடைசி 45 நிமிடம் பேராசிரியர்களால் வழங்கப்படும் சிந்தனையுரை .இதில் தொடர்ந்து வருபவர்கள் மிகப்பெரிய மாற்றங்களை உணர்ந்து இருக்கிறார்கள்.நீண்ட நாள் சில நோய்களின் தீவிரத்திலிருந்தும்,வயது மற்றும் தொழில் சார்ந்த உழைப்பால் பெற்ற உடல் உபாதைகளிலிருந்தும் மிகப்பெரிய விடுதலையைப் பெற்று இருக்கிறார்கள். 




 கல்வியின் பயன் .

                        வாழ்வதற்கு மிக முக்கியம் உடல் ஆரோக்கியம் அதை யந்திரம் என்று சொல்லாம் அதற்கு அடுத்து ஆரோக்கியமான இந்த உடலைக் கெடுத்துக்கொள்ளாத வாழ்வியல் செயல்பாடுகளுக்கான மன ஆரோக்கியம்.அது இங்குக் கற்பிக்கப்படும் தியானத்தை மந்திரம் என்று சொல்லலாம் மற்றும் அகத்தாய்வு என்ற சுய முயற்சியால் பெறப்படுகிறது .அடுத்து உடலுக்கும் உயிருக்குமான இணைப்பைத்தரும் உயிர் ஆரோக்கியத்திற்கான மாபெரும் சித்தர்களின் ரகசியத் தந்திரங்களில் ஒன்றாக வடிவமைக்கப்பட்ட தினமும் சில நிமிடங்களே செய்யக்கூடிய ’காயகல்ப’ பயிற்சி சொல்லி வைக்கப்படுகிறது இது உங்களில் எப்படிச் செயல் படுகிறது என்ற சூத்திரங்களைத் தன்னுடையை ஐம்பது வருட கால வாழ்வை, உடலை அர்பணித்து ,உலகில் சொல்லப்படும் அனைத்து யோக நூல்களின் துணையோடு தன்னுடைய சித்தவைத்திய மருத்துவப்பட்ட அறிவை உபயோகித்து யோகிராஜ் வேதாத்ரி மகரிசி அவர்களால் உருவாக்கப்பட்ட பயிற்சி பாடமாக்கப்பட்டதுதான் மனவளக்கலைப் பாடதிட்டங்கள் அனைத்தும் .இதில் பயன் பெற்ற பலரின் அனுபவங்கள் ஆச்சர்யம் தரும் . இங்குப் பயிற்சிக்குச் சேரும்போதே அவரவர்களுக்கு ஒரு படிவம் கொடுப்படும் அதில் அவரவர்களுக்கான அரோக்கியம் மற்றும் பிரச்சனைகள் பற்றி எழுத்துவார்கள் .அது அவர்கள்மேல் கூடுதலான கவனம் செலுத்தப்பயன்படும் ஆனால் இங்குத் தங்கள் அனுபவ உரை பேசியவர்கள் பலர் சொல்லும் போதுதான் தெரிகிறது அவர்கள் சொல்லாத பல அற்புதப் பலன்களைப் பெற்று இருக்கிறார்கள் என்பதை. அப்போதுதான் அந்தத் திட்ட அலுவலரின் மேலதிகப் பொறுப்பு எவ்வளவு பெரியதாக இருந்து இருக்கிறது என்று மறுபரிசீலினைப் பண்ணிக்கொண்டேன் (அதனால்தான் வெறும் பத்து மதிப்பெண் கொடுத்துக்கொண்டேன் ) 


குருவை இன்னும்.. 

                          இந்த விழா எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் இந்தப் பரந்து விரிந்துபட்ட உலகில் என்ன தேவைக்காக இந்த உடல் படைக்கப்பட்டு இருக்கிறது வாழ்வின் நோக்கம் எது என்பதையும் , எவ்வளவு வகையில் சத்தமில்லாமல் செய்ய சேவைகள் இருக்கிறது என்பதையும் அதற்கு இந்த விழா தந்த அனுபவம் பிறவிப்பயனில் ஒன்று .எனவே குருவை இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று மனம் சொல்ல, ஒவ்வொருவராய் எல்லோரும் விடைபெற்ற பின் யோசித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் .

Saturday, May 28, 2016

சொல்லால் மட்டும் நம்பாதே !


                   ஏதாவது உடம்புக்கு வந்தால்தான் நாம் மருத்துவமனைத் தேடுவோம் . வரும் முன் காப்போம் என்பது நமது வாழ்வின் தொலைக்கப்பட்ட உண்மை .   வாழ்த்துவதன் மூலம் பெறப்படும் அற்புதமான பயனை ஆராய்ந்து அறியும் தெளிவில் குறைபாடுள்ளோர்களாக நம்மில் சிலர் இருந்து வருவது வருத்தம் தருகிறது .”பின்னம் கேட்டால் முழுமைத் தரும்”( Fraction Demands Totality will supply ) என்ற குருவின் மந்திரச்சொல் தங்கள் வாழ்வை மிக எளிதாக்கும் என்பதில் உறுதியாக இல்லாதவர்களாக இருக்கிறார்கள் .குருவின் வார்த்தையின் நுட்பம் புரிந்துணரந்துக் கொண்டவர்கள் வாழ்வின் மேன்மையைத் தன் வாசலுக்குக் அழைத்து வர முடியும் .எங்கும் தேடிப்போக வேண்டாம். 

சுமார் நான்கு வருடம் குருவின் பணியில் இருக்கும் ஒரு நபரை இரண்டு வருடமாகச் சந்தித்து வருகிறேன் .எப்போதுமே எதையோ தொலைத்தவராகக் கடந்த சில மாதங்களாக இருந்து வந்தார் .விசாரித்த போது மெல்ல மவுனத்தைக் கடைபிடித்தார்.என்னை விடவும் ஒரு பங்கு மூத்தவர் . அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றவர் மட்டுமில்லாமல் திட்டமிட்டு வாழ்பவர்.அவருக்கு மனதில் ஏதோ ஒரு சொல்ல முடியாத குடும்பப் பிரச்சனையின் வலியைச் சுமக்கிறார் என்பதைத் தொடர்ந்து சந்தித்த சில வாரங்களில் உணர்ந்து கொண்டேன் .அவரை மையமாக வைத்து ஒரு நாள் வாழ்த்தின் பயனைப் பற்றி சிந்தனை உயர்வைப் பேசிய போது ,அவர் கேட்டார் நாம் வாழ்த்தினால் எனக்கு ,என் மனைவி, மகன் ,ஆகிய எல்லோருக்கும் எல்லாமும் நடந்து விடுகிறது .ஆனால் என் மருமகள் விசயத்தில் அது நடப்பதில்லை என்றார் .இது அவரை மீறி அவரிடமிருந்து வெளிப்பட்டது .நான் மெல்ல ஏன் என்றேன் .அவள் நம் மன்றத்திற்கு வருவதில்லை அதனால் இருக்கும் என்றார்.அப்படியானால் உங்கள் மனைவி வருவதில்லையே அவர்களுக்கு மட்டும் எப்படி வாழ்த்து வேலை செய்கிறது என்றேன் மறுபடியும்.அதற்கு அவர் ஒருவேளை என் மகன் வாழ்த்தினால் நடக்குமோ என்றார். 


பிறகு அவரின் (அனுபவித்துத் தீர்க்க வேண்டிய) பிரச்சனை இதுதான்.அவர் மகனும் ,மகளும் சமீபத்தில் விவாகரத்துக் கோரி (As per rule of Section 13B of the HMA Act 1955 provides for Divorce by mutual consent, period of separation is 1 year ) பிரிந்து வாழ்கிறார்கள் .மகனைச் சேர்ந்து வாழச்சொன்னால் சரி என்கிறார் ஆனால் மருமகளோ ஒத்துவரவில்லை.இதனால்தான் அவரின் வாழ்த்தின் மேல் உள்ள நம்பிக்கைச் சரிந்து நிற்கிறது ! . 

            சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய் என்பதை நினைத்துப் பாருங்கள் உங்கள் பதிவின் தொடர் உங்கள் மகன் . அதனால் உடனே வேலை செய்கிறது என்ற நம்பிக்கை உங்களுக்கு.அதுவே உங்கள் மகனின் பதிவின் இன்னொரு பகுதிதான் உங்கள் மருமகள் .பிரித்துப் பார்க்காதீர்கள்.இருவரும் ஒரு நாணயத்தின் இரு பகுதி .இருவரும் சேர்ந்துதான் அவர்கள் வாழ்வின் முழுமையை அடைய முடியும். அவர் இந்தப் பூமிக்கு எந்த வேலையோடு பிறப்பு எடுத்து இருக்கிறாரோ உங்கள் மகன் , அது வேலைக்கு உங்கள் மருமகள் பதிவும் சேர்ந்து வேலை செய்ய வேண்டும் .நம் வாழ்த்து இரண்டு பேருக்கும் போய்ச் சேரும்.இதில் பேதமில்லை.ஆனால் யார் பதிவில் சேர்ந்து வாழும் நீதியும் அறிவின் தெளிவில் முரண் இருக்கிறதோ அவர்கள் பதிவு மாறுவதற்குச் சில காலம் அதிகம் எடுத்துக்கொள்ளும் .நீங்கள் உங்கள் மகனைத் தினமும் பார்க்கிறீர்கள், வாழ்த்துகிறீர்கள் மாறுபாடு விரைவாக நிகழ்கிறது அதே போல் உங்கள் மருமகளை மனக்கண் முன் நிறுத்தியோ அல்லது இருவரும் இணைந்திருக்கும் திருமணக்கோலத்தைப் பார்த்தோ தினமும் நம்பிக்கையோடு வாழ்த்துங்கள். மிக விரைவில் பிறகு மாற்றத்தை உணர்வீர்கள் என்றதும் சற்று நம்பிக்கைப் பிறந்த முகத்துடன் விடைப் பெற்றார்.


இதை எங்களோடு கேட்டுக்கொண்டு இருந்த ஒருவர் அவர் விடைபெற்றுப் போனதும் என்னிடம் சந்தேகமாகக் கேட்டார்ப் பாருங்களேன் ஒரு கேள்வி ,அப்படியும் அந்தப் பெண் சேர்ந்து வாழ விருப்பம் இல்லையென்று சொன்னால்...என்றுத் தயங்கித் தயங்கி இழுத்தார் இருவருக்கும் ஒத்துப்போகாத கருவமைப்பு வேலை செய்கிறது என்பதை அந்த வாழ்த்தே அவர்களுக்கு உணர்த்தும் எல்லா ஆழமான நம்பிக்கை உடைய வலிமையான எண்ணங்கள் கொண்ட வாழ்த்தும் அற்புதமான நிலத்தில் விழுந்த விதைப்போல விதைத்த நாம் மறந்தாலும் விதைத் தன் வேலையை இயற்கையின் மாறாத இயல்பூக்கக் ( மனம் ஆழ்ந்து எதை நினைக்கிறதோ அதுவாகவே மாறும். ) கட்டளைக்குக் கட்டுப்பட்டுப் பலன் தராமல் போகாது என்றேன் .இதைக் கேட்டவர் மௌனமானார்.